Monday, December 7, 2015

கீதாரம்பம்

    பாரதப் போர் துவங்குவதற்கு முன்பாக கிருஷ்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் தான், பகவத் கீதையாக மகாபாரதத்தில் இடம் பெருகிறது.  போர்களத்தில் கௌரவ பாண்டவ சேனைகள் அணிவகுத்து நின்ற நிலையில் அர்ஜுனனுக்கு நேர்ந்த மனக்குழப்பத்தை தீர்க்கும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணரால் தன்னுடைய முதன்மை சீடனுக்கு,  "ஸ்திதப்பரஞனுக்கு" உபதேசிக்கப்பட்டது.  கிருஷ்ணர் அர்ஜூனர் உரையாடல் முடிந்த பிறகு தர்மபுத்திரர் பீஷ்மரிடமும், துரோணரிடமும் அனுமதி பெறுகிறார். அதன் பின்னர் சேனாதிபதிகள் தத்தம் சங்குகளை முழங்கிய பின்னரே யுத்தம் துவங்குகிறது.  அம்புகள் விடுபடுவதற்கு முன்பாக கீதை உபதேசிக்கப்பட்டதாக மகாபாரதத்தில் குறிப்பு உள்ளது.

    பகவத் கீதை உபநிஷத்த்துக்களின் சாரம் என்று கூறப்படுகிறது. வேதங்களை கர்ம காண்டம் என்றும், உபநிஷத்துக்களை ஞான காண்டம் என்றும் கூறுவது உண்டு. வேதங்கள் யாகம் செய்வது போன்ற சம்பிரதாயங்களை விளக்குபவை. அதற்குரிய மந்திரங்களை கொண்டவை. இறைவனை மனிதர்கள் வேண்டிக்கொள்ளத்  தக்க வழிமுறைகளை விளக்குபவை. ஆதலால் அது கர்ம காண்டம்.

    வேதத்தின் இறுதி வேதாந்தம். அவை உபநிஷத்துக்களில் அடங்கியிருக்கிறது. உபநிஷத்துக்கள் மெய்ப்பொருளை விளக்குபவை எனக்கொள்ளலாம். அதாவது ஞானத்தை அளிப்பவை. அந்த உபநிஷத்துகளின் சாரம் பகவத் கீதையில் அடங்கியிருக்கிறது எனக்கொள்ளலாம்.

    உபநிஷத்துக்களின் போக்கை விளக்குபவை பிரம்மசூத்திரம். உபநிஷத்துக்கள், அதன் போக்கை விளக்கும் பிரம்மசூத்திரம், அதன் சாற்றை பிழிந்து தரும் பகவத் கீதை, இந்த முன்றும் சேர்ந்து "ப்ரஸ்தானத்த்ரயம்" என்று கூறப்படுகிறது. அதாவது முடிவான தீர்வான மூன்று என்பதாகும்.

    பகவத் கீதைக்கு பல பெரியோர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வாசாரியார் ஆகியோர் அளித்த உரைகள் பிரசித்தியானவை. இவர்களுடைய உரை மூன்று வெவ்வேறு கோணங்களிலிருந்து பகவத் கீதையை அணுகுபவை.

  • ஆதிசங்கரர் அருளிய கோட்பாடு "அத்வைதம்".   -  ஜீவராசிகளின் ஆத்மாவும், இறைவனாகிய பரம்பொருளும் ஒன்றே ஆகும் என்பது அத்வைதம். அத்வைதம் என்றால் இரண்டானதல்ல என்று பொருள்.
  • ஸ்ரீ ராமானுஜர் அருளியது "விஷிஷ்டாத்வைதம்" - அதாவது விஷேஷமுடைய இரண்டற்ற தன்மை. ஜீவராசிகளின் ஆத்மா பரம்பொருளிலிருந்து தோன்றுகிறது. முக்தியடையும் போது மீண்டும் பரம்பொருளையே அது சாரும். அது வரை ஜீவாத்மா வேறாக இருந்தாலும், அது பரம்பொருளின் அம்சமே என்பது இதன் பொருள். பரம்பொருள் சூரியன் போல, ஆத்மா அதன் கிரணங்கள் போல.
  • ஸ்ரீ மத்வாச்சாரியார் அருளியது "த்வைதம்" - அதாவது இரண்டானது என்று பொருள். பரம்பொருள் வேறு ஜீவராசிகளின் ஆத்மா வேறு என்பது இதன் பொருள்.


மேற்கொண்டு பாராயணம் செய்யும் முன் தியான ஸ்லோகம்.

    ஓம் தாயே பகவத் கீதே. சாக்ஷாத் பகவான் நாராயணனால் பார்த்தனுக்கு உபதேசிக்கப்பெற்றவள், புராண முனியாகிய வியாசரால் மகாபாரதத்தின்கண் அமைக்கப்பெற்றவள், அத்வைத அமிர்தத்தை வர்ஷிப்பவள், பிறவிப் பிணியை போக்குபவள்,  பதினெட்டு அத்தியாயங்களை உடையவள், ஆகிய பகவதியே உன்னை த்யானிக்கின்றேன்.

    விசால புத்தி உடையவரும், நன்கு அலர்ந்த தாமரை போன்ற கண் உடையவருமாகிய வியாசரே, மகாபாரதம் என்ற, எண்ணை நிறைந்த ஞான தீபத்தை ஏற்றி வைத்த உமக்கு நமஸ்காரம்.

    சரணடைந்தவருக்கு கற்பக வ்ருக்ஷம் போன்றவனும், பசுவை ஓட்டுதற்கு பிரம்பை ஒரு கையில் பிடித்திருப்பவனும், கீதை என்னும் அமிர்தத்தை கறந்தவனும், சின்முத்திரை தான்கியிருப்பவனுமாகிய கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.


    உபநிஷதங்கள் யாவும் பசுக்கள், க்ருஷ்ணன் பால் கறப்பவன். பார்த்தன் கன்று, அருந்துபவர்கள் பேரறிஞகர்கள். கீதை எனும் அமிர்தம் இவ்வாறு ஒப்பற்ற பாலாகிறது.

    வசுதேவருடைய மகன், கம்சனையும், சானூரனையும் கொன்றவன், தாய் தேவகிக்கு பரமானந்தத்தை கொடுப்பவன், ஜகத்குரு தேவன் கிருஷ்ணனையும் வணங்குகிறேன்.

    குருக்ஷேத்திரத்தில் இருந்த ரண நதிக்கு, பீஷ்மரும், துரோணரும் கரைகள், ஜெயத்ரதன் நீர், காந்தார மன்னன் நீலொத்புலம் என்னும் புஷ்பம், சல்லியன் சுறா மீன், துருபன் பிரவாகம், கர்ணன் பேரலை, அஸ்வத்தாமனும், விகர்ணனும் மகர மீன்கள், துரியோதனன் நீர்சுழல். கிருஷ்ணனை படகோட்டியாகக் கொண்டு இது பாண்டவர்களால் கடக்கப்பட்டது.

    பராசரர் புதல்வராகிய வியாசரின் வாக்கு எனும்  நீரில் உதித்த, பல கதைகளை மகரந்தமாக உடைய, உபன்யாசங்களால் அலர்ந்து உலகத்தில் நல்லோர் எனும் தேன் வண்டுகளால் நாள் தோறும் அனந்தமாக அருந்தப் பெற்ற, கீதையின் மூலம் நறுமணத்தை உடைய குற்றமற்ற மகாபாரதம் எனும் தாமரைப்பூவானது கலியினுடைய தோஷத்தை நீக்க விரும்புவனுக்கு நலம் தருவதாகுக.

    யாருடைய கிருபையானது உமையை பேச வைக்கிறதோ, முடவனை மலையை தாண்டச் செய்கிறதோ அந்த பரமானந்த மாதவனை வணங்குகிறேன். பிரம்மா, வருணன், இந்திரன், ருத்ரன், தேவதைகள் யாரை திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ, சாம கானம் செய்கின்றவர்கள், யாரை அங்கமும், பதக்ரமும், உபனிஷதுக்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ, யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார் பால் வைத்து உணர்கிறார்களோ, சூர, அசுர கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்கள் இல்லையோ, அந்த தெய்வத்திற்கு நமஸ்காரம்.

No comments:

Post a Comment