Tuesday, December 22, 2015

அர்ஜுன விஷாத யோகம் - அத்தியாயம் 1

அத ப்ரதமோ த்ய்யாயஹா

அர்ஜுன விஷாத யோகம்


    குருக்ஷேத்திரப் போர் நடைபெறுகையில் கண்ணில்லா திருதராஷ்டிர ராஜன் தான் அங்கு செல்லக்கூடாமையால், ஹஸ்தினாபுரத்தில் தன் அரண்மனையில் இருந்து கொண்டே, போர்களத்து செய்திகளை தமக்கு சொல்லும்படி சஞ்சயன் என்ற மந்திரியை நியமிக்கிறான். வேத வியாசரின் அருளால் ஞான திருஷ்டி பெற்றவனாக சஞ்சயன் போர்களத்து செய்திகளை திருதராஷ்டிரனுக்கு சொல்லுகிறான்.

    கண்ணனுக்கும், பார்த்தனுக்கும் போர் தொடக்கத்தில் நடந்த சம்பாஷணையை, சஞ்சயன் கூறுவதாக சமைக்கப்பட்ட பகவத் கீதைக்கு இந்த முதல் அத்தியாயம் பாயிரமாக* கருதத்தகும்.

ஸ்லோகம்  1.1

    திருதராஷ்டிர உவாச

    தர்மஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்சவ:|
    மாமகா: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத சஞ்சய||


விளக்கம்

    திருதராஷ்டிரன் சொல்லுகிறான்.
    சஞ்சயா, அறனிலமாகிய குருக்ஷேத்திரத்தில், போர் செய்ய வேண்டி திரண்ட நம்மவர்களும், பாண்டவர்களும் என்ன செய்தனர்.


ஸ்லோகம் 1.2

    சஞ்சய உவாச
    த்ருஷ்ட்வாது பாண்டவானீகம் வ்யூடம் துர்யோதனஸ்ததா|
    ஆசார்யமுபசங்கம்ய ராஜா வசனமப்ரவீத் ||

விளக்கம்

    சஞ்சயன் சொல்லுகிறான்
    அப்போது துரியோதன ராஜன் அணி வகுத்து நின்ற பாண்டவர் படையை பார்த்துவிட்டு ஆசார்யர் துரோணரிடம் சென்று பின்வருமாறு கூறலாயினன்.

ஸ்லோகம் 1.3

    பஸ்யைதாம் பாண்டு புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்|
    வ்யூடாம் த்ருபதபுத்ரேண தவ சிஷ்யேண தீமதா ||

விளக்கம்

    குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுக்கப்பட்ட இந்த பாண்டவ படையை பார்.

ஸ்லோகம் 1.4

    அத்ர ஸுரா மகேஷ்வாஸா பீமார்ஜூனஸமா யுதி |
    யுயுதாநோ விராடஸ்ச த்ருபதஸ்ச மகாரத:||

விளக்கம்

    இங்கு சூரரும், பெரிய வில்லாளிகளும்  போரில் பீமனையும், பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள். யுயுதானன், விராடன், மகாரதனாகிய துருபதன்.


ஸ்லோகம் 1.5

    த்ருஷ்டகேதுஸ்சேக்ஹிதாந:  காஸிராஜஸ்ச விர்யவான்|
    புருஜித்குந்தி போஜஸ்ச ஸைப்யஸ்ச நரபுங்க்கவ:||

விளக்கம்

    த்ருஷ்டகேது, சேகிதானன், வீர்யமுடைய காசிராஜன், புருஜித், குந்திபோஜன்,


ஸ்லோகம் 1.6
    யுதாமன்யுஸ்ச விக்ராந்த உத்தமௌஜாஸ்ச விரிவான்|
    ஸௌபத்ரோ த்ரௌபதேயாஸ்ச சர்வ ஏவ மஹாரதா:||

விளக்கம்
    வலிமை மிக்க யுதாமன்யன், உத்தமௌஜா எனும் வீரன், சுபத்திரை மகன், திரௌபதியின் மக்கள், எல்லோருமே மகாரதர்.



* பாயிரம் என்பது நூலாசிரியர் தாம் கூறப்போகும் கருத்துக்களை முன்னுரையாக முதலில் கூறும் பகுதி.

No comments:

Post a Comment